மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை- கடன் பிரச்சினையால் விபரீதம்


மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை- கடன் பிரச்சினையால் விபரீதம்
x

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடன் பிரச்சினையில் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடன் பிரச்சினையில் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது.

கால்நடை டாக்டர்

சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை டாக்டர். இதே பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்து வந்தவர் இவரது தம்பி போபட் எல்லப்பா. பள்ளிக்கூட ஆசிரியர்.

இவர்கள் வசித்து வந்த வீடுகள் இன்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

9 பேர் பிணமாக மீட்பு

அப்போது 2 வீட்டிற்குள்ளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பிணமாக கிடந்தனர். ஒரு வீட்டில் பிணமாக கிடந்தவர்கள் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா, அவரது தாய் அக்தை, மனைவி ரேகா, மகள் பிரதிமா, மகன் ஆதித்யா, மருமகன் சுபம் எனவும், மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தவர்கள் ஆசிரியர் போபட், அவரது மனைவி அர்ச்சனா, மகள் சங்கீத் எனவும் தெரியவந்தது.

இதில் 3 பேர் ஒரே இடத்திலும், மற்றவர்கள் வீட்டில் ஆங்காங்கேயும் பிணமாக கிடந்தனர்.

9 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விஷம் குடித்து...

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இருப்பினும் அவர்களது வீடுகளில் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்கள் சாவுக்கான சரியான காரணத்தை கூற முடியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த குடும்பத்தினர் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் காட்டுத்தீயாக பரவி மராட்டியம் முழுவதும் சோக அலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story