மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் அதிரடி சோதனை; ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர் - அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூல்


மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் அதிரடி சோதனை; ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர் - அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 2 Oct 2023 7:15 PM GMT (Updated: 2 Oct 2023 7:15 PM GMT)

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூலிக்கப்பட்டது.

மும்பை,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூலிக்கப்பட்டது.

டிக்கெட் பரிசோதனை

மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் தாதர் ரெயில் நிலையத்தில் தினசரி 3 முதல் 5 லட்சம் வரையில் பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் ரெயில் நிலையத்தில் ஓசிப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை கண்டறிய நேற்று முன்தினம் சுமார் 195 டிக்கெட் பரிசோதர்கள் களம் இறங்கினர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் தாதர் உள்பட போரிவிலி, பாந்திரா ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் ரெயிலில் ஓசிப்பயணம் மேற்கொண்ட பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ரூ.4.60 லட்சம் அபராதம்

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், மனித சங்கிலி போன்று நாங்கள் இணைந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடத்தினோம். ஒரே நாளில் சுமார் 1,600 பயணிகள் ஓசிப்பயணம் மேற்கொண்டதாக பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டது. டிக்கெட் வாங்காமல் ஓசிப்பயணம் செய்வது குறித்து பயணிகளிடம் கேட்டால், கொரோனாவிற்கு பிறகு டிக்கெட் இன்றி பயணம் செய்வது பழக்கமாகி விட்டதாகவும், அபராதம் செலுத்த தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதிகம் பேர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை விரும்புவதால் ரெயில்வே அதற்கான சாதனங்களை வழங்க வேண்டும், என்றார்.


Next Story