சாலையோர பெஞ்ச் திட்டத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வோம்- ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை


சாலையோர பெஞ்ச் திட்டத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வோம்- ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

சாலையோரத்தில் பெஞ்ச் போடும் திட்டத்துக்கு ரூ.263 கோடியில் டெண்டர் விடப்பட்டதற்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வோம் என ஆதித்ய தாக்கரே எச்சரித்து உள்ளார்.

மும்பை,

சாலையோரத்தில் பெஞ்ச் போடும் திட்டத்துக்கு ரூ.263 கோடியில் டெண்டர் விடப்பட்டதற்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வோம் என ஆதித்ய தாக்கரே எச்சரித்து உள்ளார்.

சாலையோர பெஞ்ச் திட்டம்

மும்பையில் தெருக்களில் சாலையோரங்களில் பெஞ்ச் போட மும்பை மாநகராட்சி சார்பில் ரூ.263 கோடி அளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார். டெண்டரில் பொருட்களின் விலை 100 சதவீதம் அதிகமாக காட்டப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

மும்பை மாநகராட்சியை தற்போது நிர்வகிக்கும் அதிகாரிகள், அதிகாரிகளா அல்லது சர்வாதிகாரர்களா என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்த நிர்வாகமும் வெளிப்படைதன்மையின்றி செயல்படுகிறது. எல்லா உத்தரவுகளும் முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்புற மேம்பாட்டு துறையால் பிறப்பிக்கப்படுகிறது.

கோர்ட்டுக்கு செல்வோம்

40 ஆயிரம் பெஞ்ச் போடப்போவதாக கூறுகிறார்கள். நமது சட்டவிரோத முதல்-மந்திரிக்கு அவரது கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருப்பது பிடிக்கும் என்பது தெரியும். ஆனால் மும்பை மாநகராட்சி 40 ஆயிரம் பெஞ்சுகளை எங்கு போடப்போகிறது. இந்த முறைகேடை பா.ஜனதா எம்.எல்.ஏ. தான் அம்பலப்படுத்தினார். அவருக்கு போலியான பதில்கள் தான் வந்து உள்ளன. இந்த திட்டத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வோம். விசாரணைக்கு வலியுறுத்துவோம்.

எங்கள் அரசு அமைந்தவுடன் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை ஜெயிலில் அடைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story