இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததால் ஆத்திரம்; இளம்பெண் கத்தியால் குத்தி கொலை - 2 தம்பதி கைது


இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததால் ஆத்திரம்; இளம்பெண் கத்தியால் குத்தி கொலை - 2 தம்பதி கைது
x
தினத்தந்தி 28 Jun 2023 8:00 PM GMT (Updated: 28 Jun 2023 8:00 PM GMT)

இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த 2 தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த 2 தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

இறுதி சடங்கு

மும்பை காட்கோபர்- மன்சூர்த் சாலையில் அருகே வசித்து வருபவர் கிருஷ்ணா பவார். இவரது சகோதரர் கடந்த செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டதாக தெரிகிறது. இவரது இறுதி சடங்கில் அதேபகுதியை சேர்ந்த அஞ்சலி போசலே மற்றும் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. இது கிருஷ்ணா பவாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அஞ்சலி போசலேவின் வீட்டிற்கு சென்று கிருஷ்ணா பவார் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அஞ்சலி போசலேவின் தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலி போசலே மற்றும் அவரது 25 வயது சகோதரி இருவரும் அவரை தடுக்க முயன்றனர். அப்போது கிருஷ்ணா பவார் அஞ்சலியின் சகோதரியை பலமுறை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தீவிர சிகிச்சை

காயம் அடைந்த அஞ்சலி போசலேவின் தாயாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஞ்சலி போசலே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் போலீசார் கிருஷ்ணா பவார் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு கணவன்- மனைவியை கைது செய்தனர். 4 பேருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story