சரத்பவாருக்கு மத்திய வேளாண் மந்திரி பதவி தர பா.ஜனதா தயாராக உள்ளது; பிரிதிவிராஜ் சவான் தகவல்
சரத்பவாருக்கு மத்திய வேளாண்துறை மந்திரி பதவியை தர பா.ஜனதா தயாராக உள்ளது என காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியுள்ளார்.
மும்பை,
சரத்பவாருக்கு மத்திய வேளாண்துறை மந்திரி பதவியை தர பா.ஜனதா தயாராக உள்ளது என காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியுள்ளார்.
ரகசிய சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார், அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. சரத்பவார் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளார். அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக உள்ளார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை புனேயில் உள்ள தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் சரத்பவார், அஜித்பவார் ரகசியமாக சந்தித்து பேசியது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரத்பவாருக்கு மந்திரி பதவி
இந்தநிலையில் பா.ஜனதா சரத்பவாருக்கு மத்திய வேளாண் துறை மந்திரி பதவியை தர தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- பா.ஜனதா சரத்பவாருக்கு மத்திய வேளாண் துறை மந்திரி பதவி அல்லது நிதி ஆயோக் தலைவர் பதவியை தர தயாராக உள்ளது. எனினும் அஜித்பவாரின் அழைப்பை சரத்பவார் ஏற்கவில்லை என்று தான் எனக்கு தகவல் வந்தது. சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீலுக்கும் பதவி தர பா.ஜனதா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சரத்பவார், அஜித்பவார் ரகசிய சந்திப்பு காரணமாக 'இந்தியா' கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.