குடியிருப்பு கட்டிடம் இடிந்து குழந்தை, பெண் பலி - 5 பேர் காயம்


குடியிருப்பு கட்டிடம் இடிந்து குழந்தை, பெண் பலி - 5 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Sep 2023 7:15 PM GMT (Updated: 3 Sep 2023 7:15 PM GMT)

தானே அருகே பிவண்டியில் ஒரு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 8 மாத குழந்தை மற்றும் பெண் பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

தானே,

தானே அருகே பிவண்டியில் ஒரு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 8 மாத குழந்தை மற்றும் பெண் பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

கட்டிடம் இடிந்து விபத்து

தானே மாவட்டம் பிவண்டி தோபிதலாவ் துர்கா சாலையில் 6 வீடுகளை கொண்ட ஒரு மாடி கட்டிடம் உள்ளது. நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் அதில் வசித்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் 7 பேர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தானே மற்றும் பிவண்டி மாநகராட்சி மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உள்பட 2 பேர் பலி

இதில் படுகாயம் அடைந்த 8 மாத பெண் குழந்தை மற்றும் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பலியான பெண் உஸ்மா மோமின் (வயது40), குழந்தை தஸ்லீமா என தெரியவந்தது. மேலும் காயம் அடைந்த 4 பெண்கள் மற்றும் 65 வயது ஆண் என 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இடிபாடுகளை மீட்பு படையினர் போராடி அகற்றினர். சிலர் வெளியில் சென்று இருந்ததாலும், இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்காததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இந்த கட்டிட விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story