சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ், உத்தவ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் - தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை


சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ், உத்தவ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் - தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை
x
தினத்தந்தி 17 July 2023 7:30 PM GMT (Updated: 17 July 2023 7:31 PM GMT)

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ், உத்தவ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.ஆனால் தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

மும்பை,

மராட்டியத்தில் பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. இந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் உள்ளிட்ட பலர் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளனர். இதனால் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பலம் கணிசமாக குறைந்துள்ளது. மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் மந்திரி யசோமதி தாக்கூர், மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விதான்பவன் படிக்கட்டுகளில் கூடி மாநில அரசு ஊழலில் ஈடுபடுவதாக கூறி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் தரப்பை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. முன்னதாக நேற்று முன்தினம் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு அரசு சார்பில் அழைப்பு விடுத்திருந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story