கொரோனா தடுப்பு பணி முறைகேடு; முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர் மீது வழக்குப்பதிவு

கொரோனா பரவலின் போது ‘பாடிபேக்', முககவசம் போன்ற உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக போலீசார் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
கொரோனா பரவலின் போது 'பாடிபேக்', முககவசம் போன்ற உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக போலீசார் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதிக விலைக்கு 'பாடிபேக்'
மும்பையில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கரை கைது செய்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அரசியல் பிரமுகர்கள், மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்தநிலையில் கொரோனா பரவலின் போது மும்பை மாநகராட்சி சார்பில் உடல்களை மூடும் 'பாடி பேக்', முககவசம், ரெம்டெசிவிர் மருந்து போன்றவை சந்தை விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குற்றம்சாட்டினார். மேலும் அவர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தாா்.
முன்னாள் மேயர் மீது வழக்கு
அவரின் புகார் தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், ஒப்பந்ததாரர், கூடுதல் மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டவர்கள் மீது முறைகேடு, மோசடி, சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கொரோனா பரவலின் போது ரெம்டெசிவிர் மருந்து, 'பாடிபேக்', முககவசம் வாங்கியது, கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.






