முல்லுண்டில் ரெயில் முன் பாய்ந்து சிறுமி தற்கொலை; போலீஸ் விசாரணை


முல்லுண்டில் ரெயில் முன் பாய்ந்து சிறுமி தற்கொலை; போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2023 7:00 PM GMT (Updated: 8 Oct 2023 7:00 PM GMT)

முல்லுண்ட் ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு பாய்ந்து 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

முல்லுண்ட் ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு பாய்ந்து 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டியூசன் சென்ற சிறுமி

மும்பை முல்லுண்ட் கிழக்கு மகாடா காலனியை சேர்ந்த 13 வயது சிறுமி, அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 6-ந்தேதி பள்ளி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த சிறுமி, உணவு சாப்பிட்டுவிட்டு டியூசனுக்கு புறப்பட்டு சென்றாள். வீட்டின் அருகே வந்த ஏ.சி. பஸ்சில் ஏறி முல்லுண்ட் ரெயில் நிலைய நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றாள். ரெயில் நிலையம் பிளாட்பாரம் நம்பர் 4-ல் வந்து சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள். மாலை 6.10 மணி அளவில் மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி செல்லும் விரைவு வழித்தடத்தில் மின்சார ரெயில் வந்துகொண்டிருந்தது. இதனை கவனித்த சிறுமி திடீரென தண்டவாளத்தில் குதித்தாள்.

தற்கொலை

இதனை கண்ட மோட்டார் மேன் அதிர்ச்சி அடைந்து ரெயிலின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றார். இருப்பினும் ரெயில் சிறுமி மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். இந்த சம்பவத்தை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடல்பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி வைத்திருந்த பாடபுத்தக பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அவரது பெற்ேறாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பள்ளிக்கூட நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story