கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது - தாராவியில் சம்பவம்


கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது - தாராவியில் சம்பவம்
x
தினத்தந்தி 18 Jun 2023 7:00 PM GMT (Updated: 18 Jun 2023 7:00 PM GMT)

தாராவியில் கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தாராவியில் கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

பெண் மர்ம சாவு

மும்பை தாராவி பெரியார் நகரை சேர்ந்தவர் முகமது அன்வர் சேக் (வயது37). செல்போன் சர்விஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பர்வீன் சேக்(28). இவர்களுக்கு 9 வயதில் மகள் இருக்கிறாள். கடந்த வியாழக்கிழமை இரவு பர்வீன் சேக்கை மயங்கிய நிலையில், முகமது அன்வர் சேக் சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் நடத்திய சோதனையில் பர்வீன் சேக் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பர்வீன் சேக் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக முகமது அன்வர் சேக் கூறினார். பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதால் டாக்டர்கள் சம்பவம் குறித்து சாகுநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விரைந்து சென்று கணவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் டாக்டர்களிடம் கூறிய அதே கதையை மீண்டும் கூறினார். ஆனால் பெண்ணின் கழுத்து, கன்னம், காது பகுதிகளில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கழுத்தை நெரித்து கொலை

போலீசார் தம்பதியின் 9 வயது மகளிடம் விசாரித்தனர். அப்போது அவர், தாய், தந்தைக்கு அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்படும் என தெரிவித்தார். மேலும் சம்பவத்தன்று உருது வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த போது தாய் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் அவரது கழுத்தில் துணி ஒன்று சுற்றி இருந்ததாகவும் சிறுமி தெரிவித்தாள். இதையடுத்து போலீசார் முகமது அன்வர் சேக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கொலை தொடர்பாக சாகுநகர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "முகமது அன்வர் சேக்கிற்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்து உள்ளது. இதனால் பர்வீன் சேக் கணவனை கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. முகமது அன்வர் சேக்கின் உடலிலும் கடித்த காயங்கள் உள்ளது. சண்டையின் போது தப்பிக்க பர்வீன் சேக் அவரை கடித்து இருக்கலாம். முகமது அன்வர் சேக்கை கைது செய்து உள்ளோம்" என்றார்.


Next Story