தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து ஜெயந்த் பாட்டீல் நீக்கம் - அஜித்பவார் அணி அதிரடி அறிவிப்பு


தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து ஜெயந்த் பாட்டீல் நீக்கம் - அஜித்பவார் அணி அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 July 2023 8:00 PM GMT (Updated: 3 July 2023 8:01 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜெயந்த் பாட்டீல் நீக்கப்பட்டதாக அஜித்பவார் அணி அதிரடியாக அறிவித்துள்ளது.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜெயந்த் பாட்டீல் நீக்கப்பட்டதாக அஜித்பவார் அணி அதிரடியாக அறிவித்துள்ளது.

நீக்கம்

சரத்பவார் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் அணி தரப்பு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு சுனில் தட்காரே எம்.பி. நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சட்டசபை சபாநாயகரிடம் ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு அவரது அணி தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் பிரபுல் படேல் எம்.பி. செய்தியாளர்களிம் கூறியதாவது:-

கொறடா

தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக அஜித்பவாரை நான் நியமித்துள்ளேன். அதேநேரம் மந்திரியாக நேற்று முன்தினம் பதவியேற்ற அனில் பாட்டீல், சட்டமன்றத்தின் கட்சி கொறடாவாக தொடருவார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மற்றும் நரேந்திர மோடியின் தலைமையை ஆதரிப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒருமித்த கூட்டு முடிவாகும். இன்று(நேற்று) குரு பூர்ணிமா தினமாகும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தொடர்ந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். அஜித்பவாரின் அணியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்று எங்களிடம் கேட்பதற்கு பதிலாக, எதிர் அணியிடம் இந்த கேள்வியை முன்வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இரு அணிகளிடம் இருந்து மாறிமாறி வரும் உத்தரவுகளால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் சூழ்ந்துள்ளது.


Next Story