சிவசேனாவை உரிமை கோரும் ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எடுக்கக்கூடாது- தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சிவசேனாவை உரிமை கோரும் ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எடுக்கக்கூடாது- தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

சிவசேனாவை உரிமை கோரும் ஏக்நாத் ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

சிவசேனாவை உரிமை கோரும் ஏக்நாத் ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிவசேனாவில் பிளவு

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த அரசியல் சூறாவளியால் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. அந்த கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியை உருவாக்கியதால், உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. மேலும் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

இந்தநிலையில் மராட்டியத்தில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்து, இரு தரப்பினரும் வருகிற 8-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

துரித நடவடிக்கை கூடாது

இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தங்களையே உண்மையான சிவசேனா என அறிவிக்க கோரும் ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீது எந்தவித அவசர நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கக்கூடாது. ஏக்நாத் ஷிண்டேவின் மனுவுக்கு பதிலளிக்க உத்தவ் தாக்கரே தரப்பு அவகாசம் கோரினால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

மேலும் மராட்டிய அரசியல் குழப்பநிலை தொடர்புடைய மனுக்களை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றுவதா?, வேண்டாமா? என்பது குறித்த உத்தரவு வருகிற திங்கட்கிழமை பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story