ஆர்தர்ரோடு சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது


ஆர்தர்ரோடு சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2023 7:45 PM GMT (Updated: 8 Oct 2023 7:45 PM GMT)

ஆர்தர்ரோடு சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

ஆர்தர்ரோடு சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

நுழைவுவாயிலில் சோதனை

மும்பை பைகுல்லாவில் ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்படுவதாக என்.எம். ஜோஷி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெளியே இருந்து வரும் ஆட்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறையின் நுழைவுவாயிலில் வந்த போலீஸ்காரர் விரேந்திர நாயக் என்பவர் உள்ளே செல்ல முயன்றார். அங்கு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை வழிமறித்து சோதனை நடத்த முயன்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் போலீசாரை தடுத்து உள்ளார்.

போலீஸ்காரர் சிக்கினார்

மேலும் சோதனை நடத்திய போலீசாரை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார். இதனை கண்ட மற்ற போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் அவர் அணிந்திருந்த உள்ளாடையில் 70 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை சிறையில் கைதியாக உள்ள ராகுல் என்பவருக்கு கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் விரேந்திரா நாயக்கை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story