தொழில் அதிபர் மீது பலாத்கார வழக்கு; டெல்லி ஆடை வடிவமைப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை


தொழில் அதிபர் மீது பலாத்கார வழக்கு; டெல்லி ஆடை வடிவமைப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

டெல்லி ஆடை வடிவமைப்பாளரின் புகாரின் பேரில் தொழில் அதிபர் மீது போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்

மும்பை,

டெல்லியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான 28 வயது பெண் ஒருவர் மும்பை கார் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:- நான் மும்பைக்கு சமீபத்தில் தான் முதல்முறையாக வந்தேன். அப்போது மும்பை மேற்கு புறநகரில் உள்ள கார் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், எனது நண்பருமான ஒருவரின் வீட்டில் தங்க முடிவு செய்தேன். அங்கு தங்கி இருந்தபோது என்னிடம் தொழிலதிபர் தகாத முறையில் நடந்துகொண்டார். அவர் சம்பவத்தன்று என்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பாலியல் துன்புறுத்தலும் செய்தார். மேலும் என்னை கடுமையாக தாக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த தொழிலதிபர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளர் புகார் அளித்தது தெரிந்ததும் சம்பந்தப்பட்ட தொழில் அதிபர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story