மரின்லைன் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் பிரிந்து ஓடியதால் பரபரப்பு


மரின்லைன் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் பிரிந்து ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2023 7:15 PM GMT (Updated: 22 Oct 2023 7:15 PM GMT)

மரின்லைன் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் பிரிந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மரின்லைன் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் பிரிந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரிந்த 3 பெட்டிகள்

மேற்கு ரெயில்வே வழித்தடமான மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.57 மணி அளவில் ஒரு மின்சார ரெயில் போரிவிலி நோக்கி புறப்பட்டு சென்றது. மரின்லைன் ரெயில் நிலையத்திற்கு காலை 11.02 மணி அளவில் வந்தபோது ரெயிலின் கடைசி 3 பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவை தனியாக பிரிந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அதிர்ச்சியில் கூச்சல் போட்டனர். அந்த 3 பெட்டிகளும் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடி நின்றது. இதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். இதற்கிடையே மோட்டார் மேன் ரெயிலை நிறுத்தினார்.

அசம்பாவிதம் தவிர்ப்பு

மெதுவாக ரெயில் சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பின்னால் இருந்து வந்த மற்ற ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் அங்கு சென்று பிரிந்த பெட்டிகளின் இணைப்பை சரிசெய்தனர். இதனை தொடர்ந்து அந்த ரெயில் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் ரெயில் பெட்டிகள் பிரிந்து ஓடிய சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story