சிறுமியை 5 நாளாக குளியல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை; நாக்பூர் தம்பதி கைது


சிறுமியை 5 நாளாக குளியல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை; நாக்பூர் தம்பதி கைது
x
தினத்தந்தி 1 Sep 2023 7:15 PM GMT (Updated: 1 Sep 2023 7:15 PM GMT)

10 வயது சிறுமியை 5 நாட்களாக குளியல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த தம்பதியை கைது செய்தனர்.

நாக்பூர்,

10 வயது சிறுமியை 5 நாட்களாக குளியல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த தம்பதியை கைது செய்தனர்.

10 வயது சிறுமி மீட்பு

நாக்பூர் அதர்வா நகரி பேசா- பிப்ளா சாலையில் உள்ள ஒரு வீட்டை சேர்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து ஊழியர்கள் மின் இணைப்பை துண்டிக்க அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது குளியல் அறை ஜன்னல் வழியாக சிறுமி ஒருவர் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்ததுடன், அவர்களின் உதவியுடன் பூட்டி கிடந்த அந்த வீட்டின் கதவை உடைத்து. அங்கு குளியல் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 10 வயது சிறுமியை மீட்டனர். கடந்த 5 நாட்களாக குளியல் அறையில் அடைக்கப்பட்டு கிடந்த சிறுமியின் அவல நிலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பதி கைது

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், இதில் அந்த வீட்டை சேர்ந்த தாகா அர்மான் கான் மற்றும் அவரது மனைவி ஹினா ஆகியோர் சேர்ந்து வீட்டு வேலை செய்ய சிறுமியை அமர்த்தி உள்ளனர். பின்னர் சிறுமியை கடுமையாக வேலை வாங்கியதுடன், அவளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்துள்ளனர். மேலும் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுட்டுவைத்து கொடுமை படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவர்கள் வெளியூர் புறப்பட்டு சென்றதால் சிறுமியை குளியல் அறையில் போட்டு அடைத்துவிட்டு, உணவிற்காக பிரெட் பாக்கெட்டுகளை உள்ளே வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இந்தநிலையில் விமான நிலையத்தில் வந்து இறங்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மைத்துனர் ஆசார் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story