காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் தங்க பதக்கம் வென்ற பூனம் யாதவ், உறவுக்காரரை சந்திக்க சென்ற இடத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். #CWG2018
வாரணாசி,
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு மகளிருக்கான பளுதூக்குதலில் 69 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கத்தினை வென்றவர் வீராங்கனை பூனம் யாதவ்.
இந்த நிலையில், சொந்த ஊர் திரும்பிய அவர் தனது உறவுக்காரர் ஒருவருக்கும் மற்றும் அருகிலுள்ள கிராம தலைவருக்கும் இடையேயான பழைய நில தகராறு விவகாரத்தில் சமரசம் பேசுவதற்காக சென்றுள்ளார். இதில் அவர் தாக்கப்பட்டு உள்ளார்.
சமரச பேச்சில் ஈடுபட முயன்ற பூனமின் தந்தை, மாமா மற்றும் உறவுக்காரர் ஒருவரும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார். அவர்கள் உடனடியாக அங்கு வந்து கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களிடம் இருந்து பூனம் யாதவை மீட்டு அழைத்து சென்றனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என போலீஸ் சூப்பிரெண்டு அமித் கூறினார்.