ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி பதக்கம்


ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி பதக்கம்
x
தினத்தந்தி 18 Nov 2021 4:33 PM GMT (Updated: 18 Nov 2021 4:33 PM GMT)

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.




டாக்கா,

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், ஆடவர் தனிநபர் இறுதி போட்டியில் 
இந்தியாவின் அபிஷேக் வர்மா மற்றும் கொரிய வீரர் கிம் ஜாங்கோ விளையாடினர்.

இந்த போட்டியில் ஜாங்கோ 148-149 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.  இந்தியாவின் அபிஷேக் வர்மா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இன்று நடந்த மகளிர் தனிநபர் இறுதி போட்டியில் 25 வயதுடைய இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம், முன்னாள் உலக சாம்பியனான கொரிய வீராங்கனை ஹோ யூஹியுன் என்பவரை 146-145 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று, இதற்கு முன் இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டி ஒன்றில், கொரிய நாட்டின் கிம் யுன்ஹீ, சோய் யாங்ஹீ இணை மற்றும் இந்தியாவின் ரிஷப் யாதவ்,  ஜோதி சுரேகா வென்னம் இணை விளையாடின.

இந்த போட்டியில், 155-154 என்ற புள்ளி கணக்கில் கொரிய இணை, இந்திய இணையை வீழ்த்தி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது.  இந்திய இணை வெள்ளி பதக்கம் வென்றது.  ஜோதி சுரேகா ஒரே நாளில் இரு பதக்கங்களை பெற்று தந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

இதற்கு முன் நடந்த ஆடவர் குழு போட்டி ஒன்றில் அபிஷேக் வர்மா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.  இதனால், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அபிஷேக்கிற்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 


Next Story