மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம்


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்  பிறந்த தினம்
x
தினத்தந்தி 15 Oct 2018 2:30 AM GMT (Updated: 15 Oct 2018 2:30 AM GMT)

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்று இளைஞர் எழுச்சி தினமாக நினைவு கூறப்படுகிறது.


இளமைக்காலத்தில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு போடும் சிறுவனாக இருந்து தனது கடின உழைப்பு,விடாமுயற்சி, தான் வகித்த அத்தனை பணிகளிலும் நேர்மை, முழு அர்ப்பணிப்பு, ஈடுபாடு, அதுமட்டுமல்ல தன் உயிரினும்மேலாக தன் தேசத்தை நேசித்து ராமேசுவரத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை உயர்ந்த மக்களின் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அனைத்து இளைஞர்களுக்கும் ஓர் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது.

“கனவு காணுங்கள்“ என்கிற ஒற்றை வார்த்தையின்மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தவர். இந்திய நாட்டு மக்கள் வறுமையின்றி வாழ வேண்டும் என்று கனவு கண்டார். ஒவ்வொரு இந்தியனையும் நாடு முன்னேறுவதற்கு ஆக்கப்பூர்வமான செயல்களை உருவாக்க கனவு காணச்செய்தார்.இந்த உலகில் பலர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து விடுகிறார்கள். இவர்களில் பலரை அவர்கள் குடும்பமே மறந்துவிடுகிறது. ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த சாதனையாளர்களை இந்த உலகம் மறப்பதே இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அப்துல்கலாம்.

தனது ஆரம்பக்கல்வியை மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியிலும்,உயர்நிலைக் கல்வியை ராமநாதபுரம் ஸ்வார்டஸ் பள்ளியிலும் கற்று தேர்ந்தார். அடுத்து கலாம் கல்லூரியில் சேர்ந்து படிக்க திருச்சி சென்றார், அங்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. சென்னை எம்.ஐ.டியில் விண்ணப்பித்தார். கல்லூரியில் சேர அழைப்பு கடிதம் வந்தது, ஆனால் அதற்கான கட்டணத்தை செலுத்த கலாமின் பெற்றோரால் முடியவில்லை. ஆனால் கலாம் அவர்களின் அக்கா கட்டணத்தை செலுத்த உதவினார். கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கி இறுதி ஆண்டு பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் சேர்ந்தார். அதில் விமானத்தை பழுது பார்த்தல் சம்மந்தமான அத்தனையும் தெரிந்துக் கொண்டார். விமானியாக வேண்டும் என்று கனவு கண்டு அதற்கான முயற்சி எடுத்து, அதற்கான நேர்காணலுக்கு சென்றார், நேர்காணலில் தோல்வி அடைந்தார். விஞ்ஞானியாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார்.

டெல்லியில் மற்றொரு பணியான முதுநிலை விஞ்ஞானி உதவியாளர் பணி கிடைத்தது. தான் விமானி ஆகமுடியவில்லை என்றாலும், விமானத்தை உருவாக்கும் பணி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தார். வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்கு வடிவமைத்து கொடுத்தார். பின்னர் இஸ்ரோவில் தனது ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்த அவர், 1980-ம் ஆண்டு ரோகினி ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டார். இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இதை பாராட்டி மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்மபூஷண்விருது வழங்கி கவுரவித்தது. 1999-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றினார், அதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். 1997-ம் ஆண்டு மத்திய அரசு பாரதரத்னா விருது வழங்கி கவுரவபடுத்தியது. 2002-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். 2007-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்து தனது சிறப்பான பணியில் மக்களின் அன்பை பெற்று மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் பணிக்கு பின்பு தான் மிகவும் விரும்பிய ஆசிரியர் பணியை மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.

அவர் ஒவ்வொரு முறையும் இளைஞர்களிடம் சொல்வது “நம்மால் முடியும்“ என்ற தன்னம்பிக்கையை உற்சாகத்தை ஊக்கத்தை நமக்குள்ளே உருவாக்கி கொண்டால், நமது நாட்டை வளர்ந்த நாடாக மிளிரச் செய்யலாம். உயரப்பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? அதற்கு கலாம் சொல்கிறார், “உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்“, லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக் கொண்டேயிரு. விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

இளைஞர்களுக்கு ஒரு லட்சிய கனவு வேண்டும். அந்த கனவு மூலமாக நம் பாரத நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல இளைஞர்களால் தான் முடியும் என்று உறுதியாக சொன்னவர், டாக்டர்ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

ராமேஷ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம்

இன்றைய இந்தியாவின் மக்கள் தொகையில் 60 கோடி பேர் இளைஞர்கள், இந்த இளைய சமுதாயம் ஆக்கப்பூர்வமான செயல்திறத்தோடு ஊக்கத்தையும் கைக்கொண்டால் எந்தவொரு சக்தியாலும் நாம் வளர்ந்த நாடாவதைத் தடுக்க இயலாது என்பதை உரக்க சொன்ன டாக்டர் கலாம். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் ‘ஜீல்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து மறைந்தார். குழந்தைகளுடன்,மாணவர்களுடன் உரையாடுவதை எப்போதுமே விரும்பிய,அவர்கள் மனம் கவர்ந்த கலாம், தன் உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எத்தனை சக்திகள் இருந்தாலும் மன எழுச்சி கொண்ட இளைஞன் தான் மிகப்பெரிய சக்தி என்று உலகிற்கு உணர்த்திய கலாம் இளைஞர்களின் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது.

மக்கள் ஜனாதிபதி என்று மக்களால் அன்போடு நினைவு கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு, ராமேஷ்வரத்தில் உள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், அவரது சேவைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். 

மேகாலயா மாநிலம் ஷில்லாங் ஐ.ஐ.எம். கல்வி நிலையத்தில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை கூறும் பயோபிக் திரையிடப்படுகிறது.
இந்த பயோபிக்கை நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஷில்லாங் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் மாணவர்களின் முன்பு உரையாற்றிக் கொண்டிருந்தபோது தான் அப்துல் கலாமின் உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story