3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி


3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி
x

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் விஷால் ஸ்ரீவஸ்தவா, 3 ஆண்டுகளில் 3 லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து அசத்தி இருக்கிறார்.

பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர், முதலாம் ஆண்டு படித்தபோது தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்திருக்கிறார். அவரது குடும்ப சூழலும் மரக்கன்று வளர்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அவர் வசித்த பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார். குடிநீர் தேடி நீண்ட தூரம் அலைந்திருக்கிறார். அந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பற்றி படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தூண்டி இருக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணி புரிய தொடங்கி இருக்கிறார்.

''தண்ணீர் பற்றாக்குறை, பருவ கால நிலை மாற்றம் போன்ற கடுமையான சுற்றுச்சுழல் பாதிப்புகளுக்கு மரங்களை வெட்டுவதுதான் முதன்மை காரணம். அதனை உணர்ந்துதான் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தேன். அதுவே என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது'' என்கிறார்.

விஷால் ஆரம்பத்தில் பி.டெக் படிப்பில் சேர ஆர்வம் காட்டவில்லை. சிறந்த கல்லூரியில் சீட் கிடைத்ததாலும், குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தாலும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். அப்போதும் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டார்.

2019-ம் ஆண்டு குவாலியரில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டவர், தன்னார்வ தொண்டு நிறுவன குழுக்களுடன் சேர்ந்து மரக்கன்று நடுதல், தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்தினார். மியாவாக்கி நுட்பத்தை விரைவாக கற்றுக்கொண்டவர் அதனை பின்பற்றி மரக்கன்றுகளை நடவு செய்கிறார். வறட்சி பிரதேசமாக காட்சி அளித்த பல இடங்கள் இன்று விஷாலின் முயற்சியால் அடர் வனங்களாக உரு மாறி இருக்கின்றன.

இதுகுறித்து விஷால் கூறும்போது, ​​"மரம் நடும் போது பல விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். சில இடங்களில் பசுமைக்காக மட்டுமே மரங்கள் நடப்படுகின்றன. சில இடங்களில், பழ மரங்கள் நடப்படுகின்றன. நாங்கள் கிராமப்புறங்களில் அதிக மரக்கன்றுகளை நடுகிறோம். பஞ்சாயத்து நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்கிறது.

இதுவரை நான் நடவு செய்த அனைத்து மரக்கன்றுகளும் பெரிய மரங்களாக வளர்ந்துவிட்டன. எந்த மரக்கன்றும் சேதமாகவில்லை. மரங்களை பராமரிக்க அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்கிறோம். அதுதான் இந்த மாபெரும் வெற்றியின் ரகசியம். குவாலியரில் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 60 ஆயிரம் மரக்கன்றுகளையும், ஜபல்பூரில் 20 ஆயிரம் மரக்கன்றுகளையும், கட்னியில் 12 ஆயிரம் மரக்கன்றுகளையும் நடவு செய்துள்ளேன். தற்போது மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்'' என்கிறார்.


Next Story