இந்தியாவின் அழகான மலை கிராமங்கள்


இந்தியாவின் அழகான மலை கிராமங்கள்
x

இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் கிராமங்கள்தான் இன்றளவும் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. கிராமங்களிலும் நவீனங்கள் புகுந்து கொண்டிருந்தாலும் எளிமையையும், பழமையையும், அமைதியான சூழலையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கிராமங்கள் ஏராளம் உள்ளன.

பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து சிறிது நாட்கள் ஒதுங்கி, ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கு புகலிடம் அளிக்கும் அழகான சில கிராமங்களை பற்றிய தொகுப்பு இது.

கல்பா, இமாச்சல பிரதேசம்:

சட்லஜ் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கிராமத்தை அற்புதமான இயற்கைக்காட்சிகள் அரண்களாக சூழ்ந்திருக்கின்றன. ஆப்பிள் தோட்டங்கள், அழகான மடங்கள், கோவில்கள், கின்னார் கைலாஷ் மலை என அமைதியான சூழலை ரசிக்க வைக்கும் இடங்கள் ஏராளம் அமைந்திருக்கின்றன.

கஜ்ஜியார், இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் 'இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. அழகிய புல்வெளிகள், பசுமை படர்ந்திருக்கும் தேவதாரு காடுகள், பனி படர்ந்த மலைகள் கொண்ட அழகிய நிலப்பரப்புகள் என மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும் இடமாக இது விளங்குகிறது. அமைதியை எதிர்பார்க்கும் நபர்களுக்கு சிறந்த இடமாகவும் அறியப்படுகிறது. கஜ்ஜியார் ஏரி, கலாடோப் வனவிலங்கு சரணாலயம், கஜ்ஜி நாக் கோவில் மற்றும் கைலாஷ் மலை கிராமம், ஆப்பிள் தோட்டங்கள் ஆகியவை கஜ்ஜியாரில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங் களின் பட்டியலில் உள்ளன. மேலும் லாடி, ரோட்டா போன்ற பல அழகிய கிராமங்களும் மனதை லயிக்க வைக்கும் அம்சங்களை கொண்டிருக்கின்றன.

வரங்கா, கர்நாடகா

பசுமை சூழப்பட்ட அமைதியான, மலைப்பாங்கான இந்த கிராமம் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

850 ஆண்டுகள் பழமையான ஏரி கோவில் (கேரே பசாதி), 1,200 ஆண்டுகள் பழமையான நேமிநாத கோவில் உள்ளிட்ட பாரம்பரிய கட்டமைப்புகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ஏரி கோவிலுக்கு படகு மூலம் மட்டுமே செல்ல முடியும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்னணியில், மரப் படகில் சவாரி செல்லும் அனுபவம் பயணத்தை இனிமையாக்கிவிடும்.

டார்ச்சிக், லடாக் (காஷ்மீர்)

இமயமலையில் அமைந்துள்ள லடாக்கின் ஆரியன் பள்ளத்தாக்கை சூழ்ந்திருக்கும் கிராமங்களில் டார்ச்சிக், தனி சிறப்பு பெற்றது. அங்கு வீசும் தூய்மையான காற்றும், அழகிய நிலப்பரப்பும், அருகே ஓடும் நதியும் இந்த கிராமத்தின் அடையாளமாக விளங்குகின்றன. பவுத்த டார்ட் பழங் குடியினரின் தாயகமாகவும் அமைந்திருக்கிறது. நீல நிறத்தில் ஓடும் நதியின் பின்னணியில் காட்சி தரும் வன சூழல் மனதை குதூகலிக்க வைத்துவிடும்.

ஜூலுக், சிக்கிம்

இமயமலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குக்கிராமம், சிக்கிமில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் இந்திய ராணுவ தளம் உள்ளது. அதனால் இந்த கிராமத்திற்கு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். மான், ஹிமாலயன் கரடி, சிவப்பு பாண்டா, பெசண்ட்ஸ், ஹிமாலயன் மோனால் உள்பட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை இங்கு காண முடியும். கோடை காலங்களில் இந்த கிராமத்தை சுற்றியுள்ள மலை பிரதேசங்களில் ரோடோடென்ட்ரான் பூக்கள் பூத்து குலுங்கும் காட்சி கண்களை குளிர்ச்சியடைய செய்துவிடும்.

ஜிரோ, அருணாச்சல பிரதேசம்

இது ஒரு அழகான பள்ளத்தாக்கு பிரதேசமாகும். மேலும் மாநிலத்தின் பழமையான பகுதிகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. இருபுறமும் மலைகளால் சூழப்பட்ட அழகிய புல்வெளிகள் கொண்ட பசுமை சூழல் இந்த கிராமத்திற்கு தனி அழகு சேர்க்கிறது.

இந்த பள்ளத்தாக்கு கிராமம் அபதானி பழங்குடியினரின் தாயகமாகவும் விளங்குகிறது. இங்கு நெல் சாகுபடி, மீன் வளர்ப்பு முக்கிய தொழில்களாக அமைந்திருக்கின்றன. நெருக்கமாக காட்சி அளிக்கும் பைன் மரங்களும், அதன் அழகியலும் இந்த கிராமத்திற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

கலாப், உத்தரகாண்ட்

இந்த கிராமம் கர்வால் பகுதியில் 7,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பைன் மற்றும் தேவதாரு காடுகள் இந்த கிராமத்தின் பின்னணியில் அழகுற காட்சி அளிக்கின்றன. இங்கு ஓடும் சுபின் நதி கிராமத்தின் இயற்கை சூழலுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. இந்த கிராமத்தில் கோதுமை, தினை, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவை பயிரிடப்படுகின்றன. விவசாயமும், செம்மறி ஆடு வளர்ப்பும் முதன்மை தொழிலாக விளங்குகிறது. பாரம்பரியமான கர்வாலி கட்டிடக்கலை சாயலில் வீடுகள் கட்டமைக்கப்படுகின்றன. அதுவும் கிராமத்திற்கு புது வடிவம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. பனி மூட்டம் சூழ்ந்திருக்கும் பந்தர்பஞ்ச் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருப்பதும் இந்த கிராமத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

1 More update

Next Story