உலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்: காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா? காதல் ஆர்வலர்கள் கருத்து


உலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்:  காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா? காதல் ஆர்வலர்கள் கருத்து
x

ரோஜாப்பூ, பரிசு பொருட்கள், இனிப்பு வகைகளை விற்பனை செய்வதற்கும் வணிக நிறுவனங்கள் காதலர் தின நாளை ஊக்குவிக்கின்றனர். இதற்கு அடிமையாகாமல் காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடலாம்.

சென்னை

காதல் இந்த ஒற்றைச் சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம். காதல் பூக்களை மட்டுமல்ல, பல்வேறு போர்க்களங்களையும் கண்டுள்ளது. வயது வித்தியாசம் இல்லை, மொழியும், இனமும், மதமும் இதற்கு தடை இல்லை. தூரங்கள் இதற்கு துளியும் தடையுமில்லை. கூடு விட்டு கூடு பாயும் மாய வித்தை போல், கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி இந்த காதலுக்கு உண்டு.

ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் உணர்வுகளால் காதலித்த பல சம்பவங்களை பல்வேறு காப்பியங்களில் படித்துள்ளோம். ஆனால் இன்று அதுவும் சாத்தியம் என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துக்கொண்டுதான் உள்ளது. எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் காதல் ஒன்றே உணர்வுபூர்வமாக மாறாததாக இருந்து வருகிறது. உலகம் காணும் ஒற்றை மதம் காதல். மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜீவராசிகளுக்கும் பொதுவானது காதல். இத்தனை சிறப்புமிக்க காதலைத் தீண்டாமல் தம் வாழ்வைத் தாண்டியோர் சொற்பமே!

காதலர் தினம்

ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு காரணங்கள் கதைகளாக கூறப்படுகிறது. கி.பி.270-ம் ஆண்டு ரோமாபுரி பேரரசர் தமது நாட்டு படைவீரர்கள் திருமணம் செய்யக்கூடாது என கட்டளையிட்டார். ஆனால் 'வாலன்டைன்' என்ற பாதிரியார் அரசருக்கு தெரியாமல் காதலிக்கும் படை வீரர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் கோபமடைந்த அரசர் பாதிரியார் வாலன்டைனுக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தார்.

சிறையில் இருந்தபோது சிறை அதிகாரியின் பார்வையற்ற மகள் அஸ்டோரியஸ் என்பவருக்கும், வாலன்டைனுக்கும் காதல் ஏற்பட்டது. இதையறிந்த அவரது தந்தை அஸ்டோரியசை வீட்டுக்காவலில் வைத்தார். பிறகு வாலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவர் அஸ்டோரியசுக்கு எழுதிய கடிதம் தூதுவர்கள் மூலம் கிடைத்த போது வாலன்டைன் இறந்து விட்டார். அவர் மரணித்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலர் தினம் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

கலாசாரம்

தமிழர் வாழ்விலும், கலாசாரத்திலும் காதல் என்பது புதிது அல்ல. தமிழர்கள் தொன்மைக் காலம் தொட்டே கலையிலும், கலாசாரத்திலும், காதலிலும், வீரத்திலும் சிறந்து விளங்கி உள்ளனர். தமிழர்களின் பல்வேறு காப்பியங்களில் காதலுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவமே இதற்கு சான்று. சங்க காலப் பாடல்களில் காதலும், கலப்பு மணமும், காந்தர்வ திருமணங்களும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

சங்க காலம் முடிந்து, நவீன காலம் தொடங்கிய பிறகே காதலின் பரிணாமமும் மாறத் தொடங்கியது.

சீரழிவு

கருப்பு-வெள்ளை சினிமா காலங்களில் காதல் என்பது மிகவும் புனிதமானதாகவே காட்டப்படும். சினிமாவில் கூட நாயகனும், நாயகியும் தொட்டுப்பேசுவதோ, கட்டிப்பிடித்து ஆடுவதோ தவிர்க்கப்பட்டது. காரணம், காதல் என்ற வார்த்தையே அப்போது கலாசார சீரழிவாக பார்க்கப்பட்டது. அந்த காலங்களில் அரசர்கள் வாழ்வியலும், புராணங்களும் மட்டுமே திரைப்படமாக உருவாக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து வண்ணப்படங்கள் உருவான காலத்தில் கூட காதலை மிகவும் மென்மையாகவும், உணர்வு பூர்வமானதாகவும் மட்டுமே திரை உருவாக்கம் செய்யப்பட்டது. 1950 முதல் 1970 கால கட்டங்கள் வரை திரைப்படங்களுக்கும், மேடை நாடகங்களுக்கும் காதல் என்ற வார்த்தை கொண்ட பெயர் கூட சூட்டப்படாத நிலைதான் இருந்தது. அப்போதெல்லாம் குடும்ப படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. காரணம், சமூகத்தில் காதல் என்பது கலாசார சீரழிவாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. சமூகத்தின் பார்வைதான் சினிமாவிலும் எதிரொலித்தது.

கொடி கட்டியது

பட்டிதொட்டியெங்கும் 1980-க்கு பிறகு சினிமாக்களில் காதல் கொடி கட்டி பறக்கத் தொடங்கியது. குறிப்பாக, திரைப்பட பாடல்களில் காதலுக்கான முக்கியத்துவம் தலைதூக்கியது. சமூகத்தில் எழுந்த மாற்றமும், காதலின் தாக்கமும் தான் சினிமாவில் எதிரொலிக்க தொடங்கியதாக இயக்குனர்கள் தெரிவித்தனர். அதே வேளையில் சினிமாவில் காட்டப்பட்ட காதல் காட்சிகளும், பாடல்களின் வரிகளும் தான் இளைஞர்களிடையே காதல் மோகத்தை உருவாக்கியது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. எது எப்படியோ பள்ளி தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை காதலிப்பது என்பது கட்டாயம் என்ற அளவிற்கு காதல் பரவ தொடங்கியது. இருப்பினும் அந்த காலக்கட்டத்தில் காதலிப்பவர்கள் சந்திப்பதும், பழகுவதும் மிகவும் அபூர்வமாகவே இருந்தது.

கருப்பு-வெள்ளை திரைப்படங்களில் ''நாதா'' என்று நாயகி அழைக்க 10 அடி தூரத்திற்கு அப்பால் நிற்கும் நாயகன் ''கண்ணே'' என்று விளித்து காதல் பாட்டு பாடுவார். சமூகத்திலும் காதலர்கள் அந்த நிலையில் தான் இருந்தனர். ஒருவரையொருவர் பார்ப்பதும், பழகுவதும், பேசுவதும் மிகவும் அரிதான சம்பவமாகவே இருந்தது.

அதன்பிறகு கலர் படங்களில் மலர்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்வது போல் காண்பிப்பார்கள். அதன்படி காதலும் மெல்ல மெல்ல அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. காதலர்கள் கல்லூரிகளிலும், பூங்காக்களிலும், கோவில்களிலும் சந்தித்து தங்கள் காதலை தைரியமாக வெளிப்படுத்த தொடங்கினார்கள். இருப்பினும் கடிதங்கள் மட்டுமே அவர்களுக்கு தகவல் தொடர்பு கருவியாக இருந்தது. எழுதிய கடிதங்களை கொடுக்க தைரியமில்லாமலும், துளிர்த்த காதலை வெளிப்படுத்த துணிச்சல் இல்லாமலும் எத்தனையோ காதல்கள் மடிந்து போன வரலாறும் உண்டு.

செல்போன் காலம்

இன்றைய நவீன காலத்தில் குறிப்பாக ''2 கே கிட்ஸ்'' என்று அழைக்கப்படும் 2000-க்கு பிறகு காதலும் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. உலகமயமாக்கலுக்கு பிறகு ஆண்டுதோறும் காதலர் தினம் கூட மிகப்பெரிய வணிகத்திருவிழாவாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 14-ந் தேதியை மையமாக வைத்து பல்வேறு வணிகம் கட்டியமைக்கப்படுகிறது. ரோஜா மலர்களின் ஏற்றுமதியும், பூங்கொத்து, வாழ்த்து அட்டை, சாக்லெட், கேக்குகள் என காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் பொருட்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் பல கோடியைத் தாண்டுகிறது. இயற்கையாக நிகழும் காதல் என்ற உணர்வு இன்று வியாபாரத்திற்காக செயற்கையாக கட்டமைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் பல்வேறு தரப்பிலும் உருவாகி உள்ளது.

நவீன அறிவியல் மாற்றங்களால் செல்போன், இன்டர்நெட் வளர்ச்சியால் காதலும் புதுப்புது அவதாரம் எடுத்துள்ளது என்பதே நிஜமாகும். அப்போதெல்லாம் காதலைச் சொல்லவே பல ஆண்டுகள் காத்திருப்பார்கள். சொல்லாத காதலும், எத்தனை எத்தனையோ. ஆனால் இப்போதுள்ள வாட்ஸ்-அப், டுவிட்டர் உலகில் காதலை வெளிப்படுத்துவது என்பது மிகவும் எளிதாகிவிட்டது. அனுப்பிய தகவலில் ஊதா நிற டிக் வந்துவிட்டதா? என்பது மட்டுமே இன்றைய இளம் தலைமுறையினர் காதலுக்காக காத்திருக்கும் காலம்.

அதேபோல் காதலியோ அல்லது காதலனோ நிராகரிப்பிற்காக வருத்தப்பட்டதெல்லாம் போன தலைமுறை. இப்போதெல்லாம் காதல் என்பதே குறுகிய கால சாகுபடி போல் மாறிவிட்டது. அறுவடை முடிந்துவிட்டால் அடுத்த பட்டத்திற்கு தயாராவது போல் ''டேட்டிங்'' "பிரேக்கிங்'' என காதலை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி உள்ளனர்.

''மாமாக் குட்டி''

இன்றைய இன்டர்நெட் காலத்தில் காதலை பாரமாக தூக்கி சுமப்பதை தவிர்த்து விட்டோம் என்கிறார்கள் இளைய தலைமுறையினர். பிடிக்கும் வரை பழகுகிறோம், கசக்கும் போது விலகுகிறோம் இதுதான் இவர்களது காதல் பார்முலா. திருமண வாழ்க்கை முறையில் கூட மேற்கத்திய கலாசாரமான ''லிவிங் டுகெதர்'' வேகமாக பரவி வருவதே இதற்கு சான்று. சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ''லவ்டுடே'' திரைப்படத்தில் இன்றைய செல்போன் தலைமுறையின் காதல் அனுபவத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருப்பதை காண முடியும். அந்த படத்தில் தனது முன்னாள் காதலரை நாயகி ''மாமாக் குட்டி'' என்று செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பார். மாமாக்குட்டி என்ற வசனம் இன்றைய இளைஞர்களிடம் மிகப்பெரிய ''டிரெண்டிங்''.

அதுபோல்தான் காதல் கடந்து வந்த பாதையும். கருப்பு-வெள்ளை காலத்தில் ''நாதா'' என்று தொடங்கிய நாகரிக வசனம் அன்று நவீன காலத்தில் ''மாமாக்குட்டி'' என்று கடந்து வந்துள்ளது. இருப்பினும் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது.

அந்த காதல் தற்போது சரியான பாதையில் பயணிக்கிறதா? காதலர் தினம் அவசியம்தானா? இதனால் நம்முடைய கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து ஏற்படுகிறதா? என்பவை குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவற்றைப் பார்ப்போம்:-

அன்பும், காதலும் தேவை

டாக்டர் பொன்மணி ராஜரத்தினம் கூறும் போது, 'நமக்கு நம்முடைய கலாசாரம், பண்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோன்று, நம் நாட்டிற்கு அன்பும், பெற்றோர் மீதும், மனைவி மீதும் செலுத்தும் காதலும் தேவைப்படுகிறது. உண்மையான காதலை பார்ப்பது அரிதாக இருக்கிறது. மாறாக காதல் என்ற போர்வையில் நடைபெறும் கலாசார சீரழிவு மற்றும் பெற்றோரின் கனவுகளை அழிக்கும் செயலில் பலர் ஈடுபடுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெற்றோர்கள் பேச்சை கேட்டு, அவர்களுடைய ஆசிர்வாதத்துடன் நடப்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்பதில்லை. நம் முன்னோர்கள் உருவாக்கி கடைப்பிடித்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் பின்பற்ற வேண்டியது இளைஞர்களுடைய தலையாய கடமையாகும். பிற தேச கலாசார மோகங்களை தவிர்த்தல், நமது கலாசார உடைகளை அணிதல், பண்டிகைகளை கொண்டாடுதல், அடுத்த தலைமுறைக்கு இவைபற்றி கற்பித்தல் என்பன நம் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய கடமையாகும். எனவே காதலர் தினம் போன்றவை தேவையற்றது' என்றார்.

வாழ்க்கை தத்துவம்

திரு.வி.க. நகரில் 80-வது வயது பிறந்தநாளை கொண்டாடும் பாலசுந்தரம்-சரஸ்வதி தம்பதியினர் கூறும்போது, 'உடல் உணர்ச்சிகளை மறந்து உள்ளத்தை மட்டுமே பார்த்தது தான் அன்றைய காதல். ஆனால் தற்போது 'கண்டதும் காதல், கொண்டது கோலம்' என்ற நிலையில்தான் இருக்கிறது. காதல் செய்பவர்களை தடுக்க முடிவதில்லை. அவர்கள் வழியில்தான் நாமும் தற்போது போக வேண்டியிருக்கிறது. கிடைத்த வாழ்க்கையை காதலர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை தத்துவமான, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுப்பது, பிறருடைய குற்றம் காண்பதிலும், பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள். நாக்கைக் கட்டுப்படுத்தினால் உள்ளத்தையும், உடலையும் எளிதாக வசப்படுத்த முடியும். அதேபோல், பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள். கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும். இதனை கடைப்பிடித்து தான் நாங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று தற்போது 80 வயதை கடந்து உள்ளோம் என்பதை அனைவரும் மறக்க வேண்டாம்' என்றனர்.

உள்ளம் உருகி காதலியுங்கள்

மதுரை ஏ.புதூரில் காதல் திருமணம் செய்த அன்பு-பாண்டிஸ்வரி ஆகியோர் கூறும்போது, 'அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று இருப்பது போல் காதலர்களுக்காக இருக்கும் ஒரே தினம் காதலர் தினம். இந்த நாளில் காதல் திருமணம் செய்து கொண்ட நாங்கள் எங்கள் அன்பை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்கிறோம். சுகமான காதலை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது. காதல் என்பது அன்பை மட்டும் பரிமாறிக்கொள்வதல்ல. இரு மனங்களின் சங்கமம். புறத்தோற்றம் பார்த்து வருவது காதல் அன்று அகத்தோற்றம் பார்த்து வருவதே உண்மையான காதல். உள்ளம் உருகி காதலியுங்கள். வாழ்வில் தென்றல் வீசட்டும்' என்றனர்.

தேவையில்லை

இந்து முன்னணி மாநகர தலைவர் ஏ.பி. இளங்கோவன் கூறும்போது, 'காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. நம்முடைய கலாசாரம் கூட்டுக்குடும்பம், பெரியவர்களை மதிப்பது, அன்னையும், பிதாவும் முன்னரி தெய்வம் என்று முதலில் தெய்வமாக அன்னையைத்தான் பார்க்கிறோம். எந்த முடிவு எடுத்தாலும் பெற்றோர்களிடம் கேட்டே முடிவு செய்கிறோம். இதுபோன்ற கூட்டுக்குடும்பமே இப்போது தேவை. மனைவி மீது செலுத்தும் காதல், உறவுகள், நண்பர்கள் மீது செலுத்தும் அன்பு போன்றவை ஏற்கனவே நம்முடைய தினசரி வாழ்க்கையில் இருக்கிறது. மேலை நாடுகளில் பெற்றோர்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசிப்பது, காதலர்கள் அவ்வப்போது தங்கள் காதலர்களை மாற்றிக்கொண்டே இருப்பது போன்ற காரணங்களால் இதுபோன்ற தினங்கள் மேலை நாடுகளுக்கு தேவைப்படுகிறது. நம்முடைய கலாசாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாசாரப்படி வாழ்வதால் இதுபோன்ற தினங்கள் நமக்கு தேவையற்றது. இந்த தினங்களை பயன்படுத்தி வணிக நிறுவனங்களும் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்காக நம்முடைய கலாசாரம், பண்பாட்டை மறந்து இதுபோன்ற தினங்களை ஊக்கப்படுத்துகின்றன. இது தேவையற்றது' என்றார்.

காதல் காதல்தான்

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மகேஷ்குப்தா-விஜயலட்சுமி கூறும்போது, 'காதல் திருமணம் செய்து கொண்ட நாங்கள் தினசரி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளத்தான் செய்கிறோம். இந்த நிலையில் அதற்கு என்று ஒரு தனி நாள் தேவையில்லை. கல் தோன்றி மண் தோன்றா தொன்மையான காதல்தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்ல காதல் இப்படி எத்தனை வகைப்படுத்தினாலும் காதல் காதல்தான். இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்து, குலம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இணைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இவை அனைத்தும் இருந்தாலும் காதலர் தினம் என்று ஒரு நாளை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. இந்த நாளில தேவையில்லாத பொருள்களை வாங்க ஆயிரக்கணக்கான பணத்தை செலவிடுவதும் தேவையற்றது' என்றார்கள்.

வணிக நிறுவனங்கள் ஊக்குவிப்பு

பெரவள்ளூரைச் சேர்ந்த பல் டாக்டர் ஐஸ்வர்யா - தினேஷ் தம்பதியினர் கூறும்போது, 'வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆன காதலர் தினத்தை கொண்டாடி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் காதலர்களுக்கு இல்லை. அன்றைய நாளில் தான் அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அனைத்து நாட்களும் அன்பை பகிர்ந்து கொள்ளலாம். தனியாக திட்டமிட்டு காதலர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதில்லை. ரோஜாப்பூ, பரிசு பொருட்கள், இனிப்பு வகைகளை விற்பனை செய்வதற்கும் வணிக நிறுவனங்கள் இந்த நாளை ஊக்குவிக்கின்றனர். இதற்கு அடிமையாகாமல் காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடலாம். அதில் எந்த தவறும் இல்லை' என்றார்.

உலகமெங்கும் ஓசூர் ரோஜாக்கள்

காதலர் தினம் என்றாலே முதலிடம் வகிப்பது ரோஜாக்கள் தான். ஒரு காலத்தில் வாழ்த்து அட்டைகள் இருந்த இடத்தை வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் பிடித்துக்கொள்ள, காதலை வெளிப்படுத்தும் ரோஜாக்களுக்கு மட்டும் என்றும் நிரந்தர இடம் உண்டு. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தை குறிவைத்தே ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில் முதலிடம் வகிப்பது ஓசூர் பகுதிதான். இந்த பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் 25-க்கும் மேற்பட்ட வண்ண, வண்ண ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகின்றன. சிவப்பு, மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா என பல்வேறு வண்ணங்களில் மிகவும் தரமான ரோஜா மலர்கள் இங்கு உற்பத்தியாகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காதலர் தினம் என்றாலே ஒரு கோடி ரோஜாக்கள் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும். இது காலப்போக்கில் படிப்படியாக குறைந்து 50 லட்சம் பூக்கள் சென்றன. இந்த ஆண்டு 20 லட்சம் ரோஜாக்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக ரோஜா மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story