நடைமேடை கட்டண உயர்வுக்கு பயணிகளுடன் வருவோர் எதிர்ப்பு; திரும்பப்பெற வலியுறுத்தல்


நடைமேடை கட்டண உயர்வுக்கு பயணிகளுடன் வருவோர் எதிர்ப்பு; திரும்பப்பெற வலியுறுத்தல்
x

8 முக்கிய ரெயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட்ட நடைமேடை கட்டண உயர்வுக்கு பயணிகளுடன் வழியனுப்ப வருவோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரும்பப்பெறவும் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை

கூட்ட நெரிசலை தவிர்க்க

பாதுகாப்பு கருதியும், நீண்டதூர பயணங்களுக்கு ஏதுவாக இருப்பதாலும் பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தையே நாடுகின்றனர். அவ்வாறு ரெயிலில் ஏற ரெயில் நிலையம் வரும் பயணிகளை வழியனுப்ப அவர்களுடன் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டநெரிசலால் சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு. எனவே தேவையில்லாமல் ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் நபர்களை கட்டுப்படுத்த ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ரெயில் நிலையங்களில் வீணாக சுற்றித்திரிவோர் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நடைமேடை டிக்கெட்டு இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.5 ஆக மட்டுமே இருந்தது. அதை வாங்கி பயணிகளுடன் வருபவர்களுக்கு ரெயில் நிலையத்தினுள் 2 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது.

கொரோனாவில் கட்டண உயர்வு

தற்போது ரெயில் நிலையங்களில் தினந்தோறும் ஏராளமாக நடைமேடை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்கின்றன. உதாரணமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் மட்டுமே தினசரி 700-ல் இருந்து 800 எண்ணிக்கையிலான நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே வாரியத்தின் அறிவிப்பின்படி, நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10-ஆக உயர்த்தப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. பயணிகளும் அதை ஏற்றுக்கொண்டு வழக்கம்போல் பயணத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் கோரத் தாண்டவத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடு விதிகளை நிர்ணயித்து அவற்றை செயல்முறைக்கும் கொண்டு வந்தது. அதன் ஒருபகுதியாக ரெயில் நிலையங்களில் தேவையற்ற நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.50 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டது.

ரூ.20-க்கு விற்பனை

இதனால் கொரோனா காலகட்டத்தில் ரெயில் நிலையங்களுக்கு வழியனுப்ப செல்வோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து நடைமேடை டிக்கெட்டு கட்டணம் பழைய நிலைக்கு வந்து தற்போது தொடர்ந்து ரூ.10-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி, சென்னை கோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட 8 முக்கிய ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பண்டிகை காலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவே தற்போது ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அந்தவகையில் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேல் குறிப்பிட்ட 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளின் விலை ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு செல்வதற்கே மின்சார ரெயிலில் கட்டணம் ரூ.10 தான் என்ற நிலையில், ரூ.20 கொடுத்து ரெயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் வாங்கி செல்ல வேண்டி உள்ளதே என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ரெயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தை கவனிக்குமா?

'நடைமேடை கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கும்'

நடைமேடை கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறைத்தால் நல்லது

சென்னையைச் சேர்ந்த சித்ராதேவி நிம்மல்கர்:-

ரெயில் நடைமேடை கட்டணம் ரூ.20 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. எனது உறவினரை வரவேற்க இன்று (நேற்று) ரெயில் நிலையத்துக்கு வந்தபோது இதுகுறித்து டிக்கெட்டு கவுண்ட்டரில் கேட்டேன். பண்டிகை காலம் என்பதால் கூட்டத்தை தவிர்க்க கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். நடைமேடை டிக்கெட்டு கட்டண உயர்வு, நடுத்தர ஏழை, எளிய மக்களை பாதிப்பதாக உள்ளது.

நடைமேடை கட்டணத்தை ரூ.20 ஆக அதிகரித்ததற்கு ஏற்ப ஏதேனும் கூடுதலாக சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. ரெயில்வே நிர்வாகம் முன்பு இருந்ததுபோல் கட்டணத்தை ரூ.10 ஆக குறைத்தால் நல்லது.

இங்கு மட்டும் ஏன்?

ஐதராபாத்தை சேர்ந்த சைதன்யா:-

நான் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்புகிறேன். இங்கே என்னுடைய உறவினர்கள் சிலர் என்னை ரெயில் நிலையத்துக்குள் வழியனுப்ப வந்தபோது நடைமேடை கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது பற்றி தெரிவித்தனர். இந்த உயர்வை நான் எதிர்பார்க்கவில்லை. எங்கள் ஊரில் அதே பழைய கட்டணம்தான் இருக்கிறது. இங்கு மட்டும் ஏன் உயர்த்தப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை.

கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளதைப்போல், அனுமதி நேரம் அதிகரிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்ததை போல அதே 2 மணி நேரம் மட்டுமே பயணிகளுடன் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கட்டணத்தை உயர்த்தியதுபோல் டிக்கெட்டுக்கான அனுமதி நேரத்தையும் கூட்டலாம் அல்லவா!

தனியார்துறையை போல்...

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இனியன்:-

ஒரு தனியார்துறை இவ்வாறாக நடந்துகொண்டு லாபத்தை பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் அரசின் ரெயில்வே நிர்வாகமே லாபத்துக்காக நடைமேடை டிக்கெட்டு கட்டணத்தை ஏற்றுவது சரியல்ல. குறிப்பாக பண்டிகை காலத்தை பயன்படுத்திக் கொண்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக என காரணம் கூறி பயணிகளை வழியனுப்ப வருவோர் ரூ.20-ஐ கட்டணமாக கொடுக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

நடைமேடை கட்டணம் ரூ.10 என்பது நியாயமானது. ஆனால் ரெயில் நிலையத்தினுள் காத்திருப்பதற்கும், நடந்து செல்வதற்கும் ரூ.20 கொடுக்க வேண்டும் என்பது சரியல்ல.

சரியான நடவடிக்கைதான்

வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பத்மாவதி:-

ஆயுதபூஜை மற்றும் தொடர்ந்து வரக்கூடிய பண்டிகைகளை முன்னிட்டு நடைமேடை டிக்கெட்டை ரூ.20 ஆக கூட்டியிருக்கின்றனர். ரெயில்வே துறை வழியே கவனித்தால் இது சரியான நடவடிக்கையே. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். பருவநிலை காரணமாக புளூ காய்ச்சல் போன்றவை பரவுவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை வரவேற்கத்தான் வேண்டும்.

ஒரு குடும்பமாக சேர்ந்து 5 பேர் ஒரு உறவினரை வழியனுப்ப வந்தால், நடைமேடை டிக்கெட்டுக்காக ரூ.100-ஐ செலவிட வேண்டும் என்பது வருத்தமளிக்கக் கூடியதே. ஆனால் பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை ஏற்கத்தான் வேண்டும்.

ரூ.10 என்றாலும்...

குன்றத்தூரைச் சேர்ந்த ராணி:-

சென்னை கடற்கரையில் இருந்து கோடம்பாக்கம் செல்லவே ரூ.5தான் செலவாகிறது. ஆனால் தற்போது ரெயில் நிலைய வளாகத்துக்குள் நுழைவதற்கே ரூ.20 கொடுக்கவேண்டிய நிலை இருக்கிறது. விலைவாசி என்பது எல்லா இடங்களிலும் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது ரெயில் நிலையத்துக்குள் செல்லக்கூட விலைவாசி பாதிக்கிறது.

எங்கள் வீட்டில் கூலி வேலை செய்துதான் வாழ்கை நடத்தி வருகிறோம். அன்றாடம் கஷ்டப்படும் நேரத்தில், ரூ.10 கூடுதலாக கொடுக்க வேண்டும் என்பது வருத்தம் அளிக்கிறது. ரூ.10தானே என்று பலர் நினைத்தாலும், அதுவும் பணம்தானே? இந்த கட்டணத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

'டிராலி' கிடைக்குமா?

ஆட்டோ டிரைவர் ஜெகன்:-

நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10-ஆகி, தற்போது ரூ.20-ஐ தொட்டுள்ளது. ரெயிலில் வரும் எனது உறவினர் உடைமைகள் வைத்திருப்பதால்தான், நான் ரெயில் நிலையத்துக்குள்ளே செல்லவேண்டியுள்ளது. இல்லையெனில் வெளியில்தான் நின்று காத்திருப்பேன். உடைமைகளை தூக்க செல்வதற்காக ரூ.20 என்பது அவசியம்தானா? இதற்கு பதிலாக நேரத்துக்கு ஏற்ப கட்டணம் என்று கொண்டுவந்திருக்கலாம். அதாவது, இவ்வளவு நேரத்துக்கு இவ்வளவு கட்டணம் என்றால் ஏற்கலாம்.

ரூ.20 என்பது ஒரு சவாரியில் வரக்கூடிய லாபம் அல்ல. அதற்குமேல் உழைக்க வேண்டியுள்ளது. நடைமேடை கட்டணம் ரூ.10 என்பது சரியானது. நான் பயணியல்ல. ரெயிலில் வருபவரை அழைக்கவே செல்கிறேன். அதற்காக ரூ.20 என்பது அதிகம். வயதானவர்களுக்காக 'டிராலி' போன்றவற்றை ஏற்படுத்தித் தந்தால், அவர்களே தங்களது உடைமைகளை ரெயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து விடுவார்கள். இதற்காக என யாரும் உள்ளே செல்ல வேண்டியதில்லை.


Next Story