50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக சேதுபாவாசத்திரம் கடலோர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், போலீசார் கார்த்திக், கோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

50 கிலோ கடல் அட்டைகள்

விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது48), ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த ராஜா (45) என்பது தெரியவந்தது.

இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் ைவத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அந்த சாக்கு மூட்டையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகள் இருந்தது.

2 பேர் கைது

இதையடுத்து மாணிக்கம், ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் உத்தரவின்படி மேல் நடவடிக்கை எடுக்க அவர்கள் 2 பேரையும் பட்டுக்கோட்டை வன சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.


Next Story