10 மாதங்களுக்கு முன் மாயமானவர் வாலிபரை கொன்று கிணற்றில் வீசியது அம்பலம் - உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரம்


10 மாதங்களுக்கு முன் மாயமானவர் வாலிபரை கொன்று கிணற்றில் வீசியது அம்பலம் - உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரம்
x

10 மாதங்களுக்கு முன் மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசியது அம்பலமானது. அவரது உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இந்த நிலையில் தனது மகனை காணவில்லை என அவரது பெற்றோர் மறைமலைநகர் போலீசில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் மர்ம நபர்கள் சிலர் பிரகாஷை அழைத்து சென்று வெட்டி படுகொலை செய்து திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் உடலை வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக மறைமலைநகர் போலீசார் திருமுடிவாகத்தை சேர்ந்த கருப்பு (30), தமிழ்மணி (29), மோசஸ் (20) உள்ளிட்ட 4 பேரை கைது செய்த நிலையில், விசாரணையில், திருமுடிவாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளில் மாமூல் வாங்குவதில் பிரகாசுக்கும், கருப்புக்கும் இடையே மோதல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரகாசை மண்ணிவாக்கம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டி கோணிப்பையில் மூட்டை கட்டி கிணற்றில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் பழுதடைந்த கிணற்றில் நீர் இருப்பதால் அதனை கழிவுநீர் வாகனம் வைத்து நீரை உறிஞ்சி அப்புறப்படுத்திவிட்டு பிரகாஷ் உடலை தேடும் பணியில் குன்றத்தூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 10 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதால் அவரது உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story