உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது


உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது
x

உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் வேனில் பணிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் அந்த பகுதியை சோ்ந்த பெண்கள் உள்பட 10 பேர் வேலைக்காக வேனில் சென்றனர். வேனை டிரைவர் சிவானந்தம் ஓட்டி சென்றார். சாலைவாக்கம் அருகே பொற்பந்தல் ஏரிக்கரையோரம் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

11 பேர் காயம்

ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து வேனின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் வேனில் சிக்கி கொண்ட 11 பேரை பத்திரமாக மீட்டனர். வேன் கவிழ்ந்த வேகத்தில் அதில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 11 பேருக்கு காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரையோரத்தில் வேன் கவிழ்ந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. கரையோரத்தை தாண்டி கூடுதல் தூரத்தில் வேன் பாய்ந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story