பட்டாசு ஆலை-விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை


பட்டாசு ஆலை-விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2023 7:37 PM GMT (Updated: 12 Oct 2023 7:38 PM GMT)

வெடி விபத்தில் 12 பேர் பலியானதால் பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

அரியலூர்

ஆலோசனை கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள்.இதையடுத்து, பட்டாசு உற்பத்தி ஆலை மற்றும் பட்டாசு விற்பனை கடைகளின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதலாக பட்டாசை சேமிக்க கூடாது. 18 வயதிற்குட்பட்டவா்களை பட்டாசு விற்பனையில் ஈடுபடுத்தக்கூடாது. தீத்தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். அவசரகால வழிகள் எளிதில் வெளியறேக்கூடியதாக இருக்க வேண்டும். பட்டாசு பண்டல்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் கவனமாக கையாள வேண்டும். பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளூர் ஆட்களை பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குழுக்கள் அமைப்பு

பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகே புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது. இதுகுறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். பட்டாசு இருப்பு குறித்து இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி அன்றாடம் பதிய வேண்டும். உரிமைதாரர் மற்றவர்களுக்கு பட்டாசு கடையை வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள லேபிள் ஒட்டிய பட்டாசுகளை அதற்குரிய பெட்டிகளில் மட்டுேம வாங்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும்.பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பிலும், விற்பனையிலும் ஈடுபடுங்கள். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story