வகுப்பறை ஜன்னலில் கட்டி வைக்கப்பட்ட 1-ம் வகுப்பு மாணவி - நடந்தது என்ன? கலெக்டர் விசாரணை


வகுப்பறை ஜன்னலில் கட்டி வைக்கப்பட்ட 1-ம் வகுப்பு மாணவி - நடந்தது என்ன? கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2023 10:29 AM GMT (Updated: 13 Oct 2023 10:54 AM GMT)

வேலூரில் 1-ம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் வகுப்பறையில் உள்ள ஜன்னலில் கட்டி வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, தலைமை ஆசிரியர் வகுப்பறையில் உள்ள ஜன்னலில் கட்டி வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமி அந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாணவி அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும் இதனால் கடந்த 4-ந்தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியை ஜன்னலில் கட்டி வைத்ததாகவும் மாணவி பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே கயிறு கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனை சிறுமியின் தாய் மறுத்துள்ளார். சிறுமி பள்ளிக்கு செல்லாததாலும் பள்ளியில் விட்ட பிறகு அடிக்கடி வகுப்பறையிலிருந்து வெளியே ஓடி வருவதாலும் மாணவியின் தாயே, கயிறு கட்டி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் சுமதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் விளக்கம் பெற்று மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை ஆசிரியர், மாணவி மற்றும் மாணவியின் தாயாரிடம் இன்று மாலை விசாரணை நடத்தவுள்ளார்.


Next Story