மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது - 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது - 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

செங்கல்பட்டு

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடும் கும்பலை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி சுற்றி திரிந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்த போது அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள மலையம்பாக்கம், மாங்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மாரிராஜ் (வயது 31), தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை இளங்காடு கிராமத்தை சேர்ந்த அய்யாபிள்ளை (30) என்பதும், ரெயில் நிலையம் மற்றும் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மாரிராஜ், அய்யா பிள்ளை ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story