சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 28 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவர்களிடம் இருந்த அட்டை பெட்டிகளில் தங்கத்தை பவுடராக மாற்றி, மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். அவர்களிடம் இருந்து ரூ.43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 860 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 744 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.31 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 630 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் துபாயில் இருந்து வந்த வாலிபரின் உள்ளாடையில் இருந்து ரூ.39 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 792 கிராம் தங்கத்தையும், கொழுப்பில் இருந்து சென்னை வந்த இலங்கை வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.19 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்.

அதே போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.30 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 612 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 2 நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்பு, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 இலங்கை வாலிபர்கள் உள்பட 8 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 28 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 இலங்கை வாலிபர்கள் உள்பட 8 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story