மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் விற்பனையில் ரூ.2 லட்சம் வருவாய் - சென்னை மாநகராட்சி தகவல்


மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் விற்பனையில் ரூ.2 லட்சம் வருவாய் - சென்னை மாநகராட்சி தகவல்
x

மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் விற்பனையில் ரூ.2 லட்சம் வருவாயாக கிடைத்துள்ள என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னையில் தினந்தோறும் சராசரியாக 5 ஆயிரத்து 100 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளாகவும் தரம் பிரிக்கப்பட்டு பெறப்படுகிறது. மேலும், குப்பைத் தொட்டிகள் மூலமாக சேகரிக்கப்படும் குப்பைகளும் தரம் பிரிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு, மாநகராட்சியின் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில், ஜூலை மாதம் 21-ந்தேதி முதல் கடந்த 16-ந்தேதி வரை பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு 48 டன் இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 870 மாநகராட்சிக்கு வருவாயாக கிடைத்துள்ளது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story