தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிப்பு முயற்சிபோலீசார் விசாரணை


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிப்பு முயற்சிபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Oct 2023 7:00 PM GMT (Updated: 9 Oct 2023 7:00 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீக்குளிப்பு முயற்சி

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த ஒரு பெண் தான் மறைத்து வைத்து கொண்டு வந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அதில் அப்பெண் முத்தம்பட்டி அருகே வே.மங்களகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பதும், அவருடைய வீட்டை சிலர் அபகரிக்க முயற்சி செய்து மிரட்டுவதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்ககோரி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதேபோல் கோணங்கி நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சிவனேசன் என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது நிலத்திற்கு செல்லும் வழிப் பாதையை ஆக்கிரமித்து சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வழிப்பாதையை மீட்டு தர கோரியும் தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார். கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story