பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு


பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
x

பெரம்பலூரில் பஸ்சில் ஏறிய பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை கண்டுபிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெரம்பலூர்

மருத்துவமனைக்கு வந்து சென்றபோது...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சின்ன பிள்ளை (வயது 57). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து சின்ன பிள்ளை மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக பஸ் ஏறுவதற்காக பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்துக்கு மதியம் சென்றார். அப்போது அவர் கீழப்புலியூர் வழியாக வைத்தியநாதபுரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார். பஸ்சின் பின்புற படிக்கட்டில் பயணிகள் கூட்ட நெரிசலுடன் சின்ன பிள்ளை ஏறினார்.

போலீசார் விசாரணை

அப்போது அவரது சேலையை பின்னால் இருந்து யாரோ பிடித்து இழுத்திருக்கிறார்கள். இதனால் பஸ்சில் ஏறிய பிறகு சின்ன பிள்ளை தனது கழுத்தை பார்த்துள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணாததால் கூச்சலிட்டார். சின்னபிள்ளை பஸ் ஏறும் போது மர்ம நபர் சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சின்ன பிள்ளை இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பஸ் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story