தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

கோவையில் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய ரூ.9¾ லட்சம் வைப்பு தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவையில் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய ரூ.9¾ லட்சம் வைப்பு தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வைப்பு தொகை
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் கடந்த 1995-ம் ஆண்டு இயங்கிய ஒரு தனியார் மில் சார்பில் பொதுமக்களிடம் இருந்து வைப்பு தொகை திரட்டப்பட்டது. அப்போது பொதுமக்கள் வழங்கும் ரூ.1 லட்சம் வைப்பு தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 2 ஆண்டுகள் கழித்து வைப்பு தொகை திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பிய கோவை, திருப்பூரை சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் அந்த மில் நிறுவனம் சார்பில் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தப்படி வைப்பு தொகை திருப்பி அளிக்கப்படவில்லை. இதனிடையே கடந்த 2000-ம் ஆண்டு அந்த நிறுவனம் நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன், செல்வராணி, ரவிசந்திரன், பெருமாள் உள்ளிட்டோர் இந்த நிறுவனத்தை ஏற்று நடத்தினர். மேலும் அந்த மில்லின் இயக்குனர்களாகவும் இருந்தனர். மேலும் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி தருவதாகவும் உறுதி அளித்தனர்.
வழக்குப்பதிவு
ஆனால் அவர்கள் வாக்குறுதி அளித்தப்படி பொதுமக்கள் முதலீட்டு தொகை திருப்பி தரப்பட வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பொதுமக்கள் 11 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் தொகையை திருப்பி தராமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நிறுவன இயக்குனர்கள் ஜெயராமன், செல்வராணி, பெருமாள், ரவிசந்திரன் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 5 பேர் இறந்து விட்டனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது. பின்னர் கடந்த ஆண்டு இந்த வழக்கு அங்குள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டு (டான்பிட்) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, பொதுமக்களின் வைப்பு தொகையை திருப்பி தராமல் ஏமாற்றியதற்காக இயக்குனர்கள் ஜெயராமன், பெருமாள் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.26 லட்சத்து 40 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மீதம் உள்ளவர்களை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சி.கண்ணன் ஆஜராகி வாதாடினார்.






