பள்ளி மேற்கூரை இடிந்து 2 மாணவர்கள் காயம்


பள்ளி மேற்கூரை இடிந்து 2 மாணவர்கள் காயம்
x

சேரன்மாதேவியில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தாலுகா அலுவலகம் எதிரே அமைந்துள்ளது பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சேரன்மாதேவி கூனியூர், புதுக்குடி, பத்தமடை, சங்கன்திரடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாலையில் 12-ம் வகுப்பு (கணினி அறிவியல்) அறையின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சேரன்மாதேவியைச் சேர்ந்த சிந்தா மைதீன் (வயது 17) மற்றும் பத்தமடையைச் சேர்ந்த கான்சா (17) ஆகிய இரு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை எனவும், அலட்சியமாக இருந்தனர் எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.


Next Story