சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி - மேல் முறையீட்டு வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு


சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி - மேல் முறையீட்டு வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
x

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை மேல் முறையீட்டு வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு உறுதி செய்தது.

சென்னை

வங்காளதேசம் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்த டி மகபுல் சேசம் பாட்ஷாவை, ஆவடி டேங்க்பேக்டரி போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு 2021-ம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர், திருச்சியில் உள்ள அயல்நாட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், கீழமை கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் புரட்சிதாசன் ஆஜரானார்.


Next Story