200 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பிரியாணி... திருமங்கலம் அருகே விநோத திருவிழா


200 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பிரியாணி... திருமங்கலம் அருகே விநோத திருவிழா
x
தினத்தந்தி 28 Jan 2024 2:37 AM GMT (Updated: 28 Jan 2024 4:18 AM GMT)

பக்தர்கள் நேற்று முன்தினம் காலை பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா நடைபெறும். 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.

விரதம் இருந்த பக்தர்கள் நேற்று முன்தினம் காலை பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலையில் நடைபெற்ற விழாவில், கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூத்தட்டுகளை பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து, 2 ஆயிரத்து 500 கிலோ பிரியாணி அரிசியில் பிரியாணி 20-க்கும்மேற்பட்ட பெரிய அண்டாக்களில் தயார் செய்யப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் சாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விடிய, விடிய காத்திருந்து பிரியாணியை பிரசாதமாக பெற்று தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம்.


Next Story