ஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு


ஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 25 Sep 2023 12:30 PM GMT (Updated: 25 Sep 2023 12:31 PM GMT)

மீஞ்சூர், பொன்னேரி பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரைப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

பொது இடங்களில் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டநிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம், ஆரணி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து பூஜைகள் வழிபாடுகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆவடி மாநகர போலீசார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீசார் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், விநாயகர் சிலைகள் குறிப்பிடப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருந்தனர்.

கடலில் சிலைகள் கரைப்பு

இந்த நிலையில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி விஜர்சன நிர்வாகி ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி பாஸ்கரன் ஊடகப்பிரிவு கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினருடன் மீஞ்சூர் பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளையும், பொன்னேரி பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளையும் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பின்னர், இந்த விநாயகர் சிலைகள் பழவேற்காடு லைட்ஹவுஸ்குப்பம் கிராமத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சியையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக பணியில் குவிக்கப்பட்டனர்.


Next Story