மோடி அரசாங்கம் சட்டத்தை விட மேலானதாக இருக்கிறதா? ப.சிதம்பரம் கேள்வி


மோடி அரசாங்கம் சட்டத்தை விட மேலானதாக இருக்கிறதா? ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 26 April 2018 12:08 PM GMT (Updated: 26 April 2018 12:08 PM GMT)

கே.எம்.ஜோசப் நியமனத்தை ஏன் மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு மதம் தான் காரணமா முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி விடுத்து உள்ளார். #InduMalhotra #SupremeCourt #PChidambaram

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதேநேரத்தில் உத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி ஜோசப் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க சட்டத்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய கொலிஜீயம் குழு, காலியாக உள்ள நீதிபதிகள் காலியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. இதில் தேர்வான ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா(61) ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்குமாறு, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை சட்ட அமைச்சகமும், ஜனாதிபதியும் ஏற்று கொண்டனர். 

அதேநேரத்தில் ஜோசப் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜோசப் நியமனம் குறித்த பரிந்துரையை திருப்பி அனுப்பி மத்திய அரசு கூறியுள்ளதாவது: 

சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அல்லது நீதிபதிகள் குழு , சரியாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஜோசப் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். தகுதி, சீனியாரிட்டி மற்றும் நியாயமான பிரதிநிதித்துவம் அடிப்படையில் ஜோசப்பை பரிந்துரையை ஏற்கவில்லை எனக்கூறியுள்ளது. 

நீதிபதி ஜோசப் கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டம், அதிரம்புழா நகரில் பிறந்தவர். இவரின் தந்தை கே.கே.மாத்யூவும் சுப்ரீம் கோர்ட்  நீதிபதியாக இருந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். கடந்த 1982-ம் ஆண்டு சட்டம் முடித்து, வழக்கறிஞராக டெல்லியிலும், கேரளாவிலும் பணியாற்றினார். அதன்பின் கேரள உயர் நிதிமன்றத்தில் 2004-ம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் தற்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜோசப் இருக்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

''இந்து மல்கோத்ரா உச்சநீதிமன்ற  நீதிபதியாக பதவி ஏற்கப்போவதை கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம், மற்றொரு நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனத்தை ஏன் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.

ஜோசப் நியமனத்தை மத்திய அரசு எதற்காக நிறுத்திவைத்துள்ளது, அதற்கான காரணம் என்ன, அவர் சாந்திருக்கும் மாநிலம் காரணமா, அல்லது அவர் சாந்திருக்கும் மதம் காரணமாக, அல்லது உத்தரகாண்ட் வழக்கில் அவர் அளித்த தீர்ப்புதான் காரணமா'' என ப.சிதம்பரம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதிகள் நியமனம் செய்வதில்  சட்டம் இப்போது உள்ளது போல்  உச்சநீதி மன்ற  கொலிஜியம்  பரிந்துரையே இறுதி மற்றும் பொருத்தமானது.

மோடி அரசாங்கம் சட்டத்தை விட மேலானதாக இருக்கிறதா?

Next Story