தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்


தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ;  5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 May 2018 9:36 AM GMT (Updated: 23 May 2018 9:36 AM GMT)

தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்  படுகாயமடைந்து பலர் தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்  பொதுமக்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் மதுரை டிஐஜி பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தோர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. 4 நீதிபதிகள் முன்னிலையில், 6 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது.

மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன.

அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2 முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர் போராட்ட மக்கள்.

சாலையோரமிருந்த வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும் பதட்ட நிலையை அடைந்துள்ளது. பின் வந்த தீயணைப்பினர் போராடி தீயை அணைத்தனர்.

வாகனம் தீ வைக்கப்பட்டதையொட்டி தூத்துக்குடி பிரையண்ட் நகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 50க்கும் மேற்பட்ட வாகனத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.

தூத்துக்குடி  அண்ணாநகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story