சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தமிழிலும் வெளியிட தீர்மானம் நிறைவேற்ற மு.க. ஸ்டாலின் கோரிக்கை


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தமிழிலும் வெளியிட தீர்மானம் நிறைவேற்ற மு.க. ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 7:37 AM GMT (Updated: 4 July 2019 7:37 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தமிழிலும் வெளியிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மு.க. ஸ்டாலின் இன்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

உலக நாடுகள் முழுவதும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அல்லது அந்த நாட்டின் மொழியில் வெளியிடப்படும்.  இந்தியா பல மொழிகளை கொண்டுள்ள நாடாக இருந்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அதன் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. தற்போது வழக்கு முடிந்து ஆங்கிலத்தில் தீர்ப்பு பதிவேற்றப்படும் அதே நேரத்தில் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் மற்ற மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, சுப்ரீம் கோர்ட்டின் மின்னணு  மென்பொருள் அணியால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளின் உதவியுடன் தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனால் ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்குள் தீர்ப்புகள் ஆறு மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கும்போது, அதிகமான மேல்முறையீடு வழக்குகள் வரும் மொழிகளை மட்டும் தற்போது தேர்ந்தெடுத்துள்ளோம். மற்ற மொழிகளையும் சேர்க்க விரைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது.

சுப்ரீம்  கோர்ட்டு தீர்ப்பை மாநில மொழிகளில் வெளியிடுவது தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  இதில், 6 மொழிகளில் சுப்ரீம்  கோர்ட்டு தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அதில் தமிழ் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், முதற்கட்டமாக 6 மொழிகளில் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டு உள்ளது.  விரைவில் தமிழில் தீர்ப்புகளை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.

Next Story