கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க 19-ந் தேதி முதல் சென்னையில் 12 நாள் முழு ஊரடங்கு புறநகர் பகுதிகளுக்கும் பொருந்தும்


கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க 19-ந் தேதி முதல் சென்னையில் 12 நாள் முழு ஊரடங்கு புறநகர் பகுதிகளுக்கும் பொருந்தும்
x
தினத்தந்தி 16 Jun 2020 6:30 AM IST (Updated: 16 Jun 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க சென்னையில் வருகிற 19-ந் தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையை யொட்டி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளுக்கும் இது பொருந்தும்.

சென்னை,

இந்தியாவில் தற்போது அமலில் உள்ள 5-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு நிபுணர் குழு அளித்தது.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மதியம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். சுமார் அரை மணிநேரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் அறிக்கை

அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் உள்ள 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 300-க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, வீடுவீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.

இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறிந்து, உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் முழு ஊரடங்கு

ஆனாலும், சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனை மற்றும் அமைச்சரவை கூட்டத்தின் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வருகிற 19-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

என்னென்ன தளர்வுகள்?

முழு ஊரடங்கின் போது கீழ்க்கண்ட சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

* மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.

* அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.

* வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. என்றாலும், அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

* மாநில அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

* மத்திய அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

காய்கறி, மளிகை கடைகள்

* வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29 மற்றும் 30-ந் தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ஏ.டி.எம்.), அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

* பொது விநியோக கடைகள் (ரேஷன்) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோக திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மற்றும் அது சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொது விநியோக கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.

* காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காய்கறி, பழ விற்பனை நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

* அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க வேண்டும்.

டீ கடைகள் கிடையாது

* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.

* முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர், நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

* அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

* பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

கட்டுமானப் பணி

* இந்த 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.

* சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை ஆர்.டி.பி.சி.ஆர்.பரிசோதனை செய்து, இந்த 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.

* சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும்.

* இந்த 12 நாட்களில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. ஆனாலும், தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

சரக்கு போக்குவரத்து

* இந்த ஊரடங்கின்போது சரக்கு போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.

* சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

* வெளிமாநிலத்தில் இருந்து வருகின்ற ரெயில்களுக்கும், விமானங்களுக்கும் அதேபோல வெளிநாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

21 மற்றும் 28-ந் தேதிகளில்...

* 21 மற்றும் 28-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். (அதாவது, 20-ந் தேதியன்று நள்ளிரவு 12 மணி முதல் 22-ந் தேதி காலை 6 மணி வரையிலும், 27-ந் தேதியன்று நள்ளிரவு 12 மணி முதல், 29-ந் தேதி காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்).

* இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

*கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்த பகுதிகளில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.

* முழு ஊரடங்கின் போது 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவை சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

அரசின் இந்த முயற்சிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சென்று மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
1 More update

Next Story