சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபர் - மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்


சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபர் - மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 16 Aug 2020 9:30 PM GMT (Updated: 16 Aug 2020 8:07 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் வாலிபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 1-வது நுழைவு வாயில் வழியாக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வாலிபர் ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கு சுற்றித்திரிந்தார்.

விமான நிலைய பாதுகாப்பு கண்காணிப்பு கேமராவில் இதை பார்த்த பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அதிகாரிகள், விரைந்து வந்து துப்பாக்கி முனையில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், பழைய பல்லாவரத்தை சேர்ந்த முரளிராஜ்(வயது 28) என்பது தெரிந்தது. அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வாலிபர், எந்தவித சோதனைகளும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் நுழைந்தது எப்படி?.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என்ன செய்து கொண்டிருந்தனர்? என மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில், அத்துமீறி விமான நிலையத்துக்குள் நுழைந்த அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பிடித்துவிட்டு, இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் விடுவித்தது தெரியவந்தது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் அலட்சியம், அத்துமீறி நுழைந்தவரை உரிய விசாரணை நடத்தாமல் விடுவித்தது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story