தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது; 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பாதிப்பு


தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது; 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2020 11:13 PM GMT (Updated: 19 Aug 2020 11:13 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தையும், முதியவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 65 ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,541 ஆண்கள், 2,254 பெண்கள் என மொத்தம் 5,795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 192 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 760 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,186 பேரும், கோவையில் 394 பேரும், திருவள்ளூரில் 393 பேரும், செங்கல்பட்டில் 315 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 18 பேரும், கிருஷ்ணகிரியில் 19 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 37 லட்சத்து 78 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 494 ஆண்களும், 1 லட்சத்து 40 ஆயிரத்து 926 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 26 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 45 ஆயிரத்து 230 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 84 பேர், தனியார் மருத்துவமனையில் 32 பேர் என 116 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னை, கோவையில் தலா 16 பேரும், ராணிப்பேட்டையில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், திண்டுக்கலில் 6 பேரும், கடலூரில் 5 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தென்காசி, தேனியில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகரில் தலா 3 பேரும், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூரில் தலா 2 பேரும், அரியலூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 6,123 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 384 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,039 பேரும், செங்கல்பட்டில் 448 பேரும், காஞ்சீபுரத்தில் 440 பேரும், திருவள்ளூரில் 402 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 53 ஆயிரத்து 155 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 885 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 755 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 915 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story