முதல்வர் வேட்பாளர் யார்? அதிகாலை 3 மணி வரை நீடித்த ஆலோசனையால் அதிமுகவில் பரபரப்பு


முதல்வர் வேட்பாளர் யார்? அதிகாலை 3 மணி வரை  நீடித்த  ஆலோசனையால் அதிமுகவில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 1:23 AM GMT (Updated: 7 Oct 2020 1:37 AM GMT)

முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இன்று (புதன்கிழமை) அறிவிப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொறுத்தவரை, சமீபத்தில் உயர்நிலை குழு கூட்டமும், செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.

செயற்குழு கூட்டத்தில், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இன்று (புதன்கிழமை) அறிவிப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம், ஓ.பன்னீர்செல்வம் விருப்பப்படி, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, தேனி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சென்றார்கள். 

அதேபோல், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்றனர். அவர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், காலை 11.10 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லி அனுப்பியதை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினார்கள். மேலும், வழிகாட்டு குழுவில் யார் - யாரை அமர்த்தலாம் என்றும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டம் மதியம் 1.40 மணி வரை சுமார் 2½ மணி நேரம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, இங்கு பேசப்பட்ட விஷயங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதற்காக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் புறப்பட்டு சென்றனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ½ மணி நேரம் அவர்கள் பேசினார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. நேற்று காலை தொடங்கிய ஆலோசனை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள்   மாறி மாறி  முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தியது அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி கிடைக்கும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் நடக்கிறது  என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அதிகாலை பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 

Next Story