அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை


அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2020 6:32 AM GMT (Updated: 22 Dec 2020 6:32 AM GMT)

அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக தலைவர் ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் 97 பக்க புகார் பட்டியல் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்” என்று அவர் கூறினார்.

Next Story