தொடர் மழையால் வற்றாத வைகை; 2 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை
தொடர் மழை காரணமாக கடந்த ஓராண்டாக வற்றாத ஜீவநதியாக வைகை மாறியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. பழங்காலத்தில் வற்றாத நதியாக இருந்த வைகை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே நீர்வரத்து உள்ள ஆறாக வைகை மாறியது.
இந்த 3 மாதங்கள் மட்டும் ஓடும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோகை வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைகை ஆற்றில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை அவ்வபோது மழை பெய்து வருவதால் வைகை ஆறு வற்றாமல் காணப்படுகிறது.
இதனால் மூல வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைகுண்டு கண்டமனூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு இந்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story