பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கு


பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கு
x
தினத்தந்தி 20 Jun 2021 7:23 PM GMT (Updated: 20 Jun 2021 7:23 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கு.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை ரூ.4-ம் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது.

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது என்றால், மாநில அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.30 கூடுதல் வரி வசூலிக்கும் தமிழ்நாடு, மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக் கொள்வதும், விலைகளை குறைக்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை.

தி.மு.க. அரசு அதன் தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாமல் இருக்க பொய்யான காரணங்களை கூறக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலைகளை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய தி.மு.க. இப்போது அதை எதிர்க்கிறது. தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பதாக கூறிய தி.மு.க. இப்போது குறைக்க முடியாது என்கிறது. தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது. இதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழக மக்களை ஏமாற்ற, அரசு முயலக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story