மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க 12-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க 12-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 July 2021 8:14 AM GMT (Updated: 9 July 2021 10:51 PM GMT)

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க, சென்னையில் நாளை மறுநாள் (12-ந்தேதி) அனைத்து சட்டமன்ற கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், அண்மையில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து, இந்த பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனக்கோரி கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபட தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்-மந்திரிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனை காப்பதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைபிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், தலைமைச்செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story