கடலூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றம்


கடலூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றம்
x
தினத்தந்தி 2 Aug 2021 1:30 AM GMT (Updated: 2 Aug 2021 1:30 AM GMT)

கடலூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்த 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு விடியல் கிடைத்துள்ளது.

கடலூர், 

கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு ஆரம்பத்தில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொண்டு வரப்பட்டு, செம்மண்டலம் குண்டுசாலையில் உள்ள பல்நோக்கு சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, உடனடியாக நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அதாவது 2011-2016, 2016-2021-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. இதனால் அந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் சமுதாய நலக்கூடத்தில் வைத்து பூட்டி வைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகள் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி யாருக்கும் பயன்படாமல் இருளில் மூழ்கி விடியலின்றி கிடந்தது.

தற்போது தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் சமுதாய நலக்கூடத்தை திறந்து இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை விடுபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். சமுதாய நலக்கூடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தினத்தந்தியிலும் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து நேற்று கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் உள்ள பல்நோக்கு சமுதாய நலக்கூடத்தை தாசில்தார் பலராமன் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் திறந்து, அதில் உள்ள 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வாகனங்கள் மூலம் ஏற்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்றனர். அதாவது கடலூர் டவுன்ஹாலில் உள்ள சிறிய அறைக்கு மாற்றினர்.

தொடர்ந்து அந்த சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story